மூன்று விரல்
மூன்று விரல் (இரா.முருகன்)
‘மூன்று விரல்’, திரு.இரா.முருகன் அவர்களின் முதல் நாவல். இவர் இதற்கு முன் இரண்டு குறுநாவல்களும், ஆறு சிறூகதைகளும் எழுதியுள்ளார். குமுதம், விகடன், கல்கி இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இவர் கணினி மென்பொருள் துறையில் பணிசெய்பவர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் நோக்கத்துடன் இந்நாவலை எழுதியுள்ளார்.
மென்பொருள் துறையினர் என்றால் குளிர் சாதன அறையிலும் வெளிநாட்டிலும் நிம்மதியானதொரு வாழ்க்கையை வாழ்பவர்கள் என்ற எண்ணத்தை உடைத்து, அவர்கள் நாள்தோறும் சந்திக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் கதையின் பின்னணியாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
கணினியில் மூன்று விரல்களைப் பயன்படுத்தி Ctrl+ Alt + Delஎன்ற பொத்தான்களை அழுத்தும்போது, அது முதலில் இருந்து மறுபடியும் செயல்படத் தொடங்குகிறது. அதேபோல் மூன்று விரல்களைக் கொண்டு வாழ்க்கையையும் நினைத்த நேரத்தில் மறுபடியும் தொடங்க முடியாது. காலம் கடந்தால் கடந்ததுதான் என்ற அர்த்தத்தில் இத்தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது.
பிராமண இளைஞனான சுதர்சன், பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்கிறான். அங்கு சந்தியா வாரியர் எனும் மலையாளப் பெண்ணுடன் காதல் முளைக்கிறது. வீட்டில் முறைப்பெண் புஷ்பவல்லி காத்திருக்க முக்கோணக் காதலாக விரிகிறது கதை.
காதலுடன் நகைச்சுவையையும் சேர்த்து நாவலை நகர்த்திச் சென்றவிதம் நம்மை ஆவலுடன் படிக்கவைக்கிறது. பாங்காக் விமான நிலையத்தில் சுதர்சனின் நண்பன் கொண்டு வந்த மிளகாய்ப்பொடியை போதை மருந்து என எண்ணி கஸ்டம்ஸ் அதிகாரி வாய்க்குள் போட்டு சோதனைச் செய்ய, அதைத்தொடர்ந்து நடக்கும் ரகளை வெடிச்சிரிப்பு. தன் ஒவ்வொரு செயலையும் சந்தியா கண்டிப்பது போல சுதர்சன் நினைத்து ரசிப்பதும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு எதிர்பார்ப்போடு முடித்து, அடுத்த அத்தியாயத்தை அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் தொடங்கி பின் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் பாங்கு புதிது. ஆயினும் மென்பொருள் துறையைப் பற்றிய மிகக் குறைந்த அறிவாவது படிப்பவர்களுக்கு வேண்டும். நாவல் முழுவதும் வரும் மென்பொருள் குறித்த ஆங்கில வார்த்தைகளைச் சற்று குறைத்திருக்கலாம். முன்னுரையும், சில இடங்களில் வசனங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டவையோ என்பதுபோல் தோன்றுகின்றது. ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட நாவல் என்று கூறலாம்.
சபரி பப்ளிகேஷன்ஸ்
336 பக்கங்கள்
145 ரூ.
3 Comments:
தங்களுடைய வருகைக்கு நன்றி அபிராமம்...
நீங்கள் படித்த சுவையான நாவல் சிலவற்றைக் கூறினால் வாங்கிப் படிப்பதற்கு உதவியாக இருக்கும்
முந்தி குமுதம்.காமில் தொடராக ஒரு பத்து அத்தியாயமோ என்னவோ படிச்சேன். அப்புறம் அதை அங்கே காணொம்.
புத்தகமா வந்துருச்சா? கட்டாயம் அடுத்தமுறை வாங்கிரணும்
i dont know that this one came in weekly magazine... thatswhy the author ended each chapter with some suspense i think
Post a Comment
<< Home