நான் படித்த புத்தகங்களைப் பற்றி......

my opinion about the various tamil and english novels i read so far

My Photo
Name:
Location: Madurai, Tamil Nadu, India

Wednesday, February 13, 2013

THE PELICAN BRIEF ( John Grisham )

திரு. ஜான் க்ரிஷாம் அவர்களின் மூன்றாவது படைப்பு, “"தி பெலிகன் பிரீஃப்". இவரது மற்ற படைப்புகளைப்போல இந்நாவலும் சட்டம் சார்ந்த ஒரு குற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
 
 
இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரே இரவில் கொலை செய்யப்பட,  கொலைக்கான நோக்கம்  தெரியாது குழம்புகிறது அமெரிக்க உள்துறை உளவு நிறுவனமான எஃப்.பி. (FBI). இந்நிலையில், டார்பி ஷா என்ற சட்டக்கல்லூரி மாணவி, இக்கொலை குறித்து ஆய்வு செய்யத் தொடங்குகிறாள். இரு நீதிபதிகளில் கோட்பாடுகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், கூடிய விரைவில் வரக்கூடிய வழக்குகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து, "பெலிகன் ப்ரீஃப்" என்ற கொலைக்கான நோக்கம் குறித்த ஆவணத்தை எழுதி முடிக்கிறாள். தன்னுடைய படைப்பின் மீது தனக்கே திருப்தி இல்லையென்றாலும், தன் கல்லூரி பேராசிரியர் கலஹனின் வேண்டுகோளுக்கு இணங்கி அதை அவரிடம் கொடுக்கிறாள் டார்பி. கலஹன் அதை தன் நண்பர் மற்றும் எப்.பி. வழக்கறிஞர் வெர்ஹீக்கிடம் காண்பிக்க, எப்.பி. வெள்ளை மாளிகைக்கு செய்தி அனுப்ப, ஆவணம் கைமாறத் தொடங்குகிறது.
 
இந்நிலையில், கலஹன் மற்றும் வெர்ஹீக் கொல்லப்பட, டார்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறாள். இந்த இரண்டு கொலைகளால் டார்பி தனது ஆவணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைப்பத்திரிக்கை நிருபரான க்ரே கிரான்தம் என்பவரிடம் ஒப்படைக்கிறாள். மர்மநபர்கள் பின் தொடர, "பெலிகன் ப்ரீஃப்"  ஆவணத்தின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முற்படுகின்றனர் இருவரும்.
நாவலின் முக்கிய பாத்திரங்கள் "பெலிகன் ப்ரீஃப்"  ஆவணத்தைப் படித்து கொலையாளியை அறிந்திருந்தாலும்,  வாசகர்கள் கொலையாளியை அறிய, இறுதி வரை காக்க வேண்டியுள்ளது. இதுவே இந்நாவலின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். கொலையாளி யார் என்பது நாளிதழில் வெளிவந்த பின், பல்வேறு கதாபாத்திரங்களின் நிலையை ஆசிரியர் விரிவாக விளக்கியது, அழகான ஒரு நிறைவைத் தருகிறது.
 
கதைச் சூழலை ஆசிரியர் விரிவாக விளக்கியிருந்தாலும், அமெரிக்க அரசியல், உச்ச நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்த ஒரு அடிப்படை அறிவு வாசகர்களுக்கு அவசியமாகிறது. மர்ம நாவல்களுக்கு இருக்க வேண்டிய வேகம் இதில் குறைவென்றாலும், படித்த திருப்தி ஏற்படுவது உண்மை.
 
விலை : 400 ரூ
பக்கங்கள் : 370
வெளியீடு : 1993

Tuesday, May 09, 2006

பொய்த்தேவு (க.நா.சு)

திரு. க.நா. சுப்ரமண்யம் (1912-1988) பற்றிப் பலர் அறிந்திருப்பீர்கள். தயவு தாட்சண்யமில்லாத கண்டிப்பான விமர்சனங்களுக்கென்றே பெயர் பெற்றவர் க.நா.சு. தினமணியில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்த இவர், அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979 இல் குமாரன் ஆசான் நினைவு விருதும், 1986 இல் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். பொய்த் தேவு, இவரது பிரபலமான நாவல்களில் ஒன்றாகும்.

“பொய்த் தேவு”- தேவு என்றால் என்ன? தலைப்பை முதலில் ஆராய்வோம். மனிதனின் மனதில் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், இலட்சியங்களும் அடங்கி இருக்கின்றன. உருப்பெறாத, ஒரு வடிவமில்லாத இவைகளையே தெய்வங்கள் எனக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆசைகளும் கனவுகளும் நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியவை. ஒரு நிமிடத்தில் ஒரு பொருளை தெய்வமாக நினைக்கும் மனிதன், மற்றொரு நிமிடத்தில் வேறொரு பொருளை தெய்வமாக நினைக்கிறான். இந்த விநாடியில் தெய்வமாக நினைத்த ஒன்று அடுத்த விநாடி பொய்த்து விடுகின்றது. பொய்த் தேவாக( தெய்வமாக) மாறிவிடுகின்றது. இதையே இத்தலைப்பு உணர்த்துகின்றது.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சாத்தனூர் எனும் கிராமத்தில், ஒரு ரெளடிக்கு மகனாய் பிறக்கும் சோமு, சோமசுந்தர முதலியாராக மாறிப் பின் சோமுப் பண்டாரமாக உயிர்விடும் வாழ்க்கைப் பயணத்தைக் கூறுவதே பொய்த் தேவு நாவலாகும். பணத்தை தெய்வமாக நினைக்கும் சோமுவின் வாழ்வும் மனமும் பாண்டுரங்கனை தெய்வமாக நினைக்கும் சாம்பமூர்த்தியின் வாழ்விலிருந்து எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றது என்பதைச் சம்பவங்களால் தெளிவாக உணர்த்துகின்றார் ஆசிரியர்.

சோமுவின் வாழ்க்கை மூன்று பாகமாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில், சிறுவயது நிகழ்ச்சிகளை விவரிக்கும் பொழுது சோமுவை ஒருமையில் விழிக்கும் ஆசிரியர், இறுதி பாகத்தில், பணம் சேர்ந்தவுடன் சோமசுந்தர முதலியார் எனப் பன்மையில் விழிக்கிறார். இதன்மூலம் படிப்போருக்கும் அக்கதாபாத்திரத்தின் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார். மேலும் சோமுவின் முப்பதாண்டு கால வாழ்க்கை இடைவேளை விட்டு இருபதே பக்கங்களில் கடத்தியிருப்பதும் புதிது.

அக்காலத் தஞ்சை, கும்பகோணம், திருவையாறு குறித்தப் பல தகவல்களை இந்நாவல் மூலம் பெறமுடிகின்றது. உதாரணமாக, தஞ்சை-கும்பகோணத்திற்கு இடையே பேருந்து வசதி வரும் முன்னரே ரயில் வசதி வந்தது போன்றவை. ஆயினும் முதல் பாகத்தில் நம்முடைய பொறுமை அதிகமாகவே சோதிக்கப்படுகின்றது. காவேரிக் கரையிலிருந்து என்றொரு அத்தியாயம். இது காவேரி அன்னைக்கே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. காவேரியைப் பற்றி அறிந்தவர்கள் நேரே அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வது நல்லது.

ஆசிரியர் கட்டுரை எழுதுவதில் வல்லுநர் என்பதாலோ என்னவோ கட்டுரை எழுதும் பாணியிலேயே கதை சொல்லப்பட்டுருக்கின்றது. ஒரு மனிதனின் அறுபது வருட வாழ்வைச் சொல்ல இதுவே தகுந்த முறையென்றாலும் 10 வரிகளுக்கும் குறைவாகவே வசனங்கள் இடம் பெற்றிருப்பது அலுப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் ஆசிரியருக்குப் பெண்கள்மீது என்ன வருத்தமோ தெரியவில்லை, நாவலில் வரும் பெரும்பாலான பெண்கள் ( வள்ளியம்மை, பாப்பாத்தி அம்மாள், கோமள வள்ளி, கமலாம்பாள், பாலம்பாள்) பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்பவர்களாகவே வருகின்றனர். அக்காலப் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் அல்ல என்பதை உணர்த்த இத்தனைக் கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றதா?!

படிப்போருக்கு மறதி அதிகம் என்று நினைப்பில் ஒரே நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் விவரித்திருக்கிறார். நேரடியாக மூன்றாவது பாகத்திற்குப் போனாலும் கதையைத் தெளிவாக உணரலாம். எ.கா. சுப்ரமண்ய ஐயரின் மகனான நாராயணன் பாத்திரம் இருமுறை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், முன்னுரையிலேயே முழுக்கதையையும் சொல்லிவிடுவதால் அதைத் தவிர்த்து, நேரடியாக முதற்பகுதிக்குச் செல்வது நல்லது. படிப்போருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டு இருக்கிறார் ஆசிரியர்.

பதிப்பகம்: காலச்சுவடு
295 பக்கங்கள்
150 ரூ



Sunday, March 05, 2006

DESTINATION UNKNOWN (Agatha Christie)


ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து தலை சிறந்த விஞ்ஞானிகள் ஒவ்வொருவராகக் காணாமல் போகின்றனர். இதன் காரணத்தைக் காவல்துறை ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில் பெட்டர்சன் எனும் மற்றொரு விஞ்ஞானியும் தலைமறைவாகிறார். தொடரும் மர்மத்திற்கு விடை தெரிந்த ஒரே நபராகக் காவல்துறை நினைக்கும் ஓலிவ் பெட்டர்சனும் (பெட்டர்சனின் மனைவி) ஒரு விபத்தில் இறக்கிறார்.

கணவனையும் மகனையும் இழந்த ஹிலாரி எனும் பெண் இதே வேளையில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். இதையறந்த காவலதிகாரி, தற்கொலை செய்து கொள்ள புதுமையான வழி ஒன்று உள்ளதாகக் கூறி அவரை ஓலிவாக நடிக்கச் சொல்கிறார். சாகத் துடிக்கும் ஹிலாரி, ஓலிவ் பெட்டெர்செனாக மாறி, தன் வாழ்க்கையின் இறுதி நாள் எப்பொழுது வரும் என்று தெரியாது தொடங்கும் பயணமே ‘UNKNOWN DESTINATION’ நாவல்.
புலனாய்வு கதைகளுக்கு பெயர்போன அகாதா கிறிஸ்டின் படைப்பு. இவர் 60 நாவல்கள் மற்றும் ஏராளமான நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவருடைய வழக்கமான புலனாய்வு கதைகளிலிருந்து சற்று வித்தியாசமாக எழுதப்பட்டது இந்நாவல் எனக் கூறலாம். ஆகையால் மார்பில் (Miss Jane Marple), பொய்ரட் (Hercule Poirot), போன்ற அவரது பிரபலமான கதாபாத்திரங்களை இதில் காண முடியாது. 1950 ல் ரஷ்ய நாட்டிற்காக உளவுவேலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ப்ரூனோ(Bruno Pontecorvo) மற்றும் ஏமில் ( Klaus Emil Fuchs) எனும் விஞ்ஞானிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல்.

கதை ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாகச் செல்கிறது. தற்கொலைக்கு முயலும் ஹிலாரியின் மனது மெல்ல மெல்ல மாறி, காதல் வயப்பட்டு வாழவேண்டும் என நினைக்கும் பொழுது அவரது வாழ்வு சாவின் நுனியில் நிற்பது விறுவிறுப்பின் உச்சகட்டம். படிப்போர் ஆவலுடன் எதிர்பார்க்கும் பெட்டர்சன், ஹிலாரியின் முதல் சந்திப்பு நாவலின் திருப்புமுனை எனக் கூறலாம். ஏனென்றால் ஓலிவ் என வந்திருப்பது தன் மனைவி இல்லை என்பதை பெட்டெர்சன் பார்த்த நொடியில் வெளிப்படுத்தினால் ஹிலாரியின் மரணம் அடுத்த நொடியில் ஏற்பட்டுவிடும்.
ஓலிவ் இறக்கும் முன்பு, ஹிலாரியிடம் அவளைத் தனக்கு ஏற்கனவே தெரியும் எனக் கூறுகிறாள். ஆனால் அதற்கான விபரம் தெளிவாக விளக்கப்படவில்லை. அவ்வப்பொழுது வரும் ப்ரென்ச் மொழி வசனங்களைப் புரிந்து கொள்வதும் சற்று சிரமமாக உள்ளது.
அகாதா கிறிஸ்டின் வெற்றிப் படைப்புகளில் இதுவும் ஒன்று.

316 பக்கங்கள்

Saturday, February 04, 2006

ஸ்ரீ மஹா பக்த விஜயம்

ஸ்ரீ மஹா பக்த விஜயம்
( குகப்ரியை)

தெய்வ பக்தியும் ஆன்ம சிந்தனையுமே இந்திய நாட்டின் தனி சிறப்புகள். அவற்றில் தமிழ்நாட்டிற்கும் பெரும் பங்கு உள்ளது. தமிழகத்திலே பக்திப் பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களைப் பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம். ஆனால் தமிழகம் அல்லாத மற்ற இடங்களின் வாழ்ந்தோரைப் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களைப் பற்றிக் கூறுவதே “ஸ்ரீ மஹா பக்த விஜயம்”
எனும் இந்நூலாகும்.


நாமக்கல் கவிஞரின் முன்னுரையோடு தொடங்கும் இந்நூலில் துளசிதாஸர், மீராபாய், சக்குபாய் போன்ற 82 வட இந்திய, கடவுள் அருள் பெற்ற புலவர்களின் வாழ்க்கையையும் பாடல்களையும் காணலாம்.


நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு கதைகள் கட்டுரை வடிவில் இடம்பெற்றிருப்பது சற்று நெருடலை அளிக்கின்றது. எ.கா. துளசிதாஸர் பற்றிக் கூறும்பொழுது கதையில் வருபவர்கள், தோற்றுவாய், துளசிதாஸரின் இளமை, கூடா ஒழுக்கம், வைராக்கியம், தெய்வ வழிபாடு போன்ற தலைப்புகள் வருகின்றன.
மேலும் அவர்கள் பாடிய பாடல்கள் அவர்களது மொழியிலேயே கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் சுவையை நம்மால் ருசிக்கமுடியவில்லை.


ஆயினும் வாய் வழியிலாக கூறப்பட்டு வந்த கதைகளைத் தேடித் தொடுத்து புத்தகமாக வெளியிட்ட முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பக்தர்களைப் பற்றி அறிய விலை தடையாக இருக்கக் கூடாது என்பதனால் குறைந்த விலையில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.


லிப்கோ பதிப்பகம்
500 பக்கங்கள்
40 ரூ    

Sunday, January 22, 2006

மூன்று விரல்


மூன்று விரல் (இரா.முருகன்)


மூன்று விரல், திரு.இரா.முருகன் அவர்களின் முதல் நாவல். இவர் இதற்கு முன் இரண்டு குறுநாவல்களும், ஆறு சிறூகதைகளும் எழுதியுள்ளார். குமுதம், விகடன், கல்கி இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இவர் கணினி மென்பொருள் துறையில் பணிசெய்பவர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் நோக்கத்துடன் இந்நாவலை எழுதியுள்ளார்.
மென்பொருள் துறையினர் என்றால் குளிர் சாதன அறையிலும் வெளிநாட்டிலும் நிம்மதியானதொரு வாழ்க்கையை வாழ்பவர்கள் என்ற எண்ணத்தை உடைத்து, அவர்கள் நாள்தோறும் சந்திக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் கதையின் பின்னணியாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
கணினியில் மூன்று விரல்களைப் பயன்படுத்தி Ctrl+ Alt + Delஎன்ற பொத்தான்களை அழுத்தும்போது, அது முதலில் இருந்து மறுபடியும் செயல்படத் தொடங்குகிறது. அதேபோல் மூன்று விரல்களைக் கொண்டு வாழ்க்கையையும் நினைத்த நேரத்தில் மறுபடியும் தொடங்க முடியாது. காலம் கடந்தால் கடந்ததுதான் என்ற அர்த்தத்தில் இத்தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது.
     பிராமண இளைஞனான சுதர்சன், பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்கிறான். அங்கு சந்தியா வாரியர் எனும் மலையாளப் பெண்ணுடன் காதல் முளைக்கிறது. வீட்டில் முறைப்பெண் புஷ்பவல்லி காத்திருக்க முக்கோணக் காதலாக விரிகிறது கதை.
     காதலுடன் நகைச்சுவையையும் சேர்த்து நாவலை நகர்த்திச் சென்றவிதம் நம்மை ஆவலுடன் படிக்கவைக்கிறது. பாங்காக் விமான நிலையத்தில் சுதர்சனின் நண்பன் கொண்டு வந்த மிளகாய்ப்பொடியை போதை மருந்து என எண்ணி கஸ்டம்ஸ் அதிகாரி வாய்க்குள் போட்டு சோதனைச் செய்ய, அதைத்தொடர்ந்து நடக்கும் ரகளை வெடிச்சிரிப்பு. தன் ஒவ்வொரு செயலையும் சந்தியா கண்டிப்பது போல சுதர்சன் நினைத்து ரசிப்பதும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
     ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு எதிர்பார்ப்போடு முடித்து, அடுத்த அத்தியாயத்தை அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் தொடங்கி பின் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் பாங்கு புதிது. ஆயினும் மென்பொருள் துறையைப் பற்றிய மிகக் குறைந்த அறிவாவது படிப்பவர்களுக்கு வேண்டும். நாவல் முழுவதும் வரும் மென்பொருள் குறித்த ஆங்கில வார்த்தைகளைச் சற்று குறைத்திருக்கலாம். முன்னுரையும், சில இடங்களில் வசனங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டவையோ என்பதுபோல் தோன்றுகின்றது. ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட நாவல் என்று கூறலாம்.

சபரி பப்ளிகேஷன்ஸ்
336 பக்கங்கள்
145 ரூ.

Sunday, October 16, 2005

oru puliyamarathin kathai

ஒரு புளியமரத்தின் கதை ( சுந்தர ராமசாமி )


முதன்முறையாக 1966 இல் வெளிவந்து தற்போது ஆறாவது பதிப்பாக வந்துள்ளது ‘ஒரு புளியமரத்தின் கதை’.

ஒரு பெரிய குளத்தின் நடுவில் நிற்கிறது புளியமரம். ஊருக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் படித்த நாவல்களில் மனிதர்களோ மிருகங்களோ கதை நாயகர்களாக இருப்பார்கள் என்பதனால் ஒரு புளியமரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மிகவும் வித்தியாசப் படுகின்றது.

புளிய மரத்தைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களை, ஆசிரியர் தொகுத்து ஒரு நாவலாக எழுதியதால் பல சிறுகதைகளைச் சேர்த்துப் படித்த எண்ணம் தோன்றுகிறது. ஆயினும் ஒவ்வொரு சம்பவமும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஆவலுடன் படிக்க முடிகிறது. நாவல் முழுவதும் வரும் நாகர்கோயில் வட்டார மொழி பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாக அமைந்துள்ளது.

புளியமரத்தை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதைக் கடவுளாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் மரம் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி நாவலை நகர்த்தியிருப்பது புதுமை.

புளியமரத்தை வெட்டும் பொழுது அங்குள்ள மக்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்களோ அதே வேதனையை படிப்பவர்கள் மனதிலும் படியவைத்திருப்பது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி.


காலச்சுவடு பதிப்பகம்
50 ரூபாய்
157 பக்கங்கள்

Thursday, September 29, 2005

CLIVE AVENUE


க்ளைவ் அவென்யு (ஆங்கிலம் )


அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் திரு. டி.எஸ். திருமூர்த்தி அவர்களின் முதல் படைப்பு, க்ளைவ் அவென்யு (clive avenue) எனும் இந்நாவல். தனக்கு மிகவும் பரிச்சியமான ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அழகாக எழுதியுள்ளார்.

சென்னையிலுள்ள க்ளைவ் அவென்யு எனும் இடத்தில் வசிக்கும் சுந்தரம் ஐயரின் ஒரே மகன் ராஜன். வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு முடிந்து இந்தியா திரும்பும் அவன், ஆறு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்ட பின், இங்கேயே வேலைதேடி நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்துடன் இருக்கிறான்.

டொமினிக் எனும் ப்ரென்ச் (French) குடும்பப்பெண் அவனது சிறுவயது தோழி. இருவரது வீடும் அருகருகில் இருந்ததனால் சுந்தரம் வீட்டுப் பெண்ணாகவே அவள் இருந்தாள். அவளுக்கு ஒரு ப்ரென்ச் இளைஞனுடனும், ராஜனுக்கு ஒரு உயர்தட்டு பிராமணப்பெண்ணுடனும் திருமண நிச்சயம் நடக்கின்றது.

பல்வேறு காரணங்களால் இவர்கள் இருவரது திருமணமும் தடைபடுகிறது. இந்நிலையில் டொமினிக்கிற்கு ஆறுதலாக ராஜன் இருக்க, அவன்மீதான காதல் அவளுக்கு புரியத்தொடங்குகிறது. ராஜனுக்கு வேறு பெண் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், கிறிஸ்துவப் பெண்ணான அவள் தன்னுடைய காதலைச் சொன்னாளா, பின் அது நிறைவடைந்ததா என்பது முடிவு.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் நாவல் படிக்கும் சுவையை ஏற்படுத்துகிறது. இந்திய, வெளிநாட்டு கலாச்சாரம், அதன் நவீன மாற்றம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. சென்னை நகரத்தைப் பற்றிய அரிய தகவல்கள் அழகாகச் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் வேகத்தைப் பாதிக்கிறது.

காதல், அதிரடி, சோகம் என அனைத்தும் கலந்த கதையைத் தேர்ந்தெடுத்த எழுத்தாளர், இன்னும் சற்று யோசித்து காட்சிகளையும் சம்பவங்களையும் கூட்டியிருக்கலாம். சிறுகதையாக எழுத வேண்டியதை நாவலாக இழுத்த எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.



பெங்குயின் வெளியீடு
விலை : 275 ரூ




Counter
Counter

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது